மறுபடியும் நயந்தாராவும் ஆர்யாவும் இணைந்து இன்னொரு படத்தில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளனர். அதற்காக நயந்தாரா ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட்டார்.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லி இப்படத்தை இயக்க இருக்கிறார்.ஏற்கனவே ஆர்யாவும், நயன்தாராவும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்படம் ஹிட்டானது. அதன்பிறகு நயன்தாரா தெலுங்கில் ராஜ ராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

பிரபுதேவாவுடன் திருமண ஏற்பாடுகள் நடந்தன. இந்து மதத்தக்கும் மாறினார். ஆனால் திருமணத்துக்கு பிரபுதேவா தாமதம் செய்ததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தெலுங்கில் நயன்தாரா கோபிசந்த் ஜோடியாக இரு படங்களில் நடித்து வருகிறார். நாகார்ஜுனாவுடனும் ஒரு படத்திலும் நடிக்கிறார். அப்படங்கள் முடிந்ததும் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அது முடிந்ததும் ஆர்யாவுடன் நடிக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

ஆர்யாவும், நயன்தாராவும் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. சமீபத்தில் ஆர்யா தனது வீட்டின் கிரகப் பிரவேச நிகழ்ச்சிக்கு நயன்தாராவை அழைத்து கேக் வெட்ட வைத்தது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் சேர்ந்து நடிப்பதால் நெருக்கம் இன்னும் அதிகமாகும் என்கின்றனர்.